இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பொருட்களை ஏற்றிச் சென்ற டிங்கி படகு ஒன்று, பலத்த காற்று மற்றும் கடும் அலைச்சலால் பாதிக்கப்பட்டு, நோரொச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆளங்குடா கடற்கரை பகுதியில் கவிழ்ந்த நிலையில் கடலில் மிதந்துகொண்டிருந்த போது, ஆளங்குடா கடற்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. பின்னர் அந்தப் படகு கற்பிட்டி விஜய கடற்படை முகாமிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மிதந்த நிலையில் இருந்த படகின் இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேவேளை சம்பவ நேரத்தில் சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் சுமார் 177 மில்லியன் ரூபாய் மதிப்புடைய 3 இலட்சத்து 54 ஆயிரம் போதை மாத்திரைகள், 5 மூட்டைகளில் அடைக்கப்பட்ட 177 கிலோ பீடி இலைகள், மேலும் மதிப்பீடு செய்யப்படாத பல்வேறு மருந்துப் பொருட்கள் (மாத்திரைகள், களிம்புகள், 118 ஊசி பாட்டில்கள், 1412 ஊசி குழாய்கள்) உள்ளிட்டவை உள்ளடங்குகின்றன.
இந்த அனைத்து பொருட்களும் கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களை தேடும் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
