2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். அவருடன் பேசி நாங்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்குத் தீர்வு காண்போம். புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்த அரசாங்கத்துக்கு நிதியளிக்க கூடாது என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கௌரவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஏற்பாடு செய்த நிகழ்வு களுத்துறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அங்கு உரையாற்றிய அவர்…
நான் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டேன். அரசியலுக்கு நான் விரும்பி வரவில்லை. மக்களால் பலவந்தமான முறையில் அரசியலுக்கு தள்ளப்பட்டேன்.கடந்த ஒன்றரை வருடகாலமாக பல சவால்களுடன் அரசியலில் ஈடுபடுகிறேன்.
எனது தந்தை பயங்கரவாதி என்று ஒருதரப்பினர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் எனது தந்தை பொலிஸில் மூன்றாவது பதவி நிலையில் இருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றியுள்ளார். சிங்கள மக்கள் தமது தலைவராக மஹிந்த ராஜபக்ஷவையே பார்க்கிறார்கள். இந்த நாட்டின் ஜனாதிபதியாக நானும் அவரை பார்க்கிறேன்.
பல வாக்குறுதிகளை குறிப்பிட்டுக் கொண்டு இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது, ஆனால் இன்றுவரை எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்த அரசாங்கத்துக்கு நிதியளித்தார்கள். ஆனால் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இனியும் ஏமாற போவதில்லை.
போலியான வாக்குறுதிகளை வழங்கியே ஜனாதிபதி நாட்டு மக்களை ஏமாற்றினார். நாட்டு மக்களுக்கு உண்மையை கூற வேண்டும். முதலில் தனது மனைவி யார் என்பதையும் ஜனாதிபதி குறிப்பிட வேண்டும்.
தனது இனத்தை ஆதரிக்கும் ஒருவர் தான் பிறிதொரு இனத்தையும் ஆதரிப்பார். ஜனாதிபதி உட்பட இந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் தனது இனத்தின் மீது பற்றில்லாதவர்கள். இவர்கள் எவ்வாறு பிறிதொரு இனத்தை ஆதரிப்பார்கள்.
நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளார். ஆகவே அவர் ஏனைய இனங்களையும் ஆதரிப்பார். 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். அவருடன் பேசி நாங்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என குறிப்பிட்டார்.
