667 மில்லியன் ரூபா செலவில் காபட் இடப்பட்டு மறுசீரமைக்கப்படவுள்ள ஹட்டன் அரச பேருந்து டிப்போவை நேற்று (17) மாலை நேரில் பார்வையிட்ட நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுல சுரவீர, டிப்போ அபிவிருத்தி பணிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
நீண்ட காலமாக சேதமடைந்த நிலையில் இருந்த ஹட்டன் டிப்போ தற்போது நவீன வசதிகளுடன் கூடிய போக்குவரத்து மையமாக மாற்றப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். டிப்போ வளாகத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பேருந்துகள் பாதுகாப்பாக இயங்கும் வகையில் உள்ளக பாதைகள் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், போக்குவரத்து சேவையின் தரத்தை உயர்த்தும் நோக்கில் ஊழியர்களுக்கான ஓய்வு அறைகள், தங்குமிட வசதிகள், சுகாதாரத் தரநிலைகளுக்கு ஏற்ப கழிப்பறைகள் மற்றும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பொழுதுபோக்கு வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த அபிவிருத்தி பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர், ஹட்டனிலிருந்து கொழும்பு உள்ளிட்ட நீண்ட தூர பகுதிகளுக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய சொகுசு பேருந்து சேவைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர அறிவித்தார்.
இந்த புதிய சேவைகள் மூலம் மலையக மக்களின் போக்குவரத்து தேவைகள் மேலும் எளிதாக்கப்படுவதுடன், சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் ஊக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹட்டன் டிப்போ புனரமைப்பு நடவடிக்கைகள் அரசாங்கத்தின் போக்குவரத்து உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் முக்கிய கட்டமாக கருதப்படுகின்றன.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி, ஹட்டன் டிப்போ அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
