மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட கஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு கணனி மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் நேற்று (18) வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
அனைத்துலக மருத்துவ நல அமைப்பினால் (IMHO) தெரிவுசெயப்பட்ட 10 பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு கணினிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (18) மஸ்கெலியாவில் இடம்பெற்றது.
திருமதி. வைஷ்ணவி மற்றும் திரு. நிதிஷ் சிவா ஆகியோரின் பூரண அனுசரணையுடன் ஹட்டன், நுவரெலியா, நிவித்திகல, இரத்தினபுரி மற்றும் எம்பிலிப்பிட்டிய கல்வி வலயங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலைகளுக்கு மொத்தமாக 50 கணினிகள் உட்பட கணினி மேசைகள் மற்றும் கதிரைகள் வழங்கிவைக்கப்பட்டன.

IMHO நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் திரு.கந்தையா விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஹட்டன் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுமதி அவர்கள் கலந்துகொண்டதுடன், கௌரவ அதிதியாக ஹட்டன் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சர்மா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும், IMHO நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், பயனடைந்த பாடசாலைகளின் அதிபர்கள், தகவல் தொழில்நுட்ப பாட ஆசிரியர்கள் மற்றும் சில பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தி, நவீன டிஜிட்டல் கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துவதன் மூலம், நவீன கல்வி வாய்ப்புகளும் வளங்களும் குறைவாக உள்ள சமூகங்களின் கல்வி முன்னேற்றத்திற்கு வழிசமைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
