2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 225,748 மாணவர்கள் உயர்தரக் கல்வியைத் தொடரத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.
பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 11,790 பேர் அனைத்து பாடங்களிலும் ‘A’ தரச் சித்திகளைப் பெற்று சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களின் தேர்ச்சி வீதங்களில் முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு 69.07 சதவீதமாக இருந்த விஞ்ஞானப் பாடத் தேர்ச்சி வீதம், இம்முறை 70.1 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், கணிதப் பாடத் தேர்ச்சி வீதமும் 71.06 சதவீதத்திலிருந்து 72.03 சதவீதமாக அதிகரித்துள்ளது.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களில் மாணவர்கள் பெற்றுள்ள பெறுபேறுகள் சாதகமான வளர்ச்சியை வெளிப்படுத்துவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி மேலும் தெரிவித்தார்.
