தெல்தெனியாவில் காரொன்றுக்குள் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அவரது சட்டபூர்வ மனைவி மற்றும் அவர்களின் சிறிய குழந்தையுடன் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, குறித்த மூவரும் நேற்று (23) வெள்ளவத்தையிலிருந்து சாவகச்சேரி நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, யாழ்ப்பாண பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினரும் வலான மத்திய ஊழல் மற்றும் ஒழுக்கக்கேடு தடுப்பு பிரிவினரும் இணைந்து இன்று (24) அதிகாலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட வேளையில் சந்தேகநபர் முகத்தை மறைக்கும் வகையிலான ஆடை அணிந்திருந்ததுடன், அவரது மனைவி முஸ்லிம் பெண் ஒருவரைப் போன்று வேடமணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்ப விசாரணைகளின் போது, தனது மற்ற இரண்டு பிள்ளைகளையும் பொலிஸ் பாதுகாப்பில் ஒப்படைப்பதற்காக வவுனியாவிலிருந்து குருநாகல் சென்றதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
வலான மத்திய ஊழல் மற்றும் ஒழுக்கக்கேடு தடுப்பு பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகலவின் நேரடி மேற்பார்வையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலும், சந்தேகநபர்கள் அண்மையில் நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளில் தங்கியிருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
கடந்த ஜூன் 17 ஆம் திகதி தெல்தெனியா வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவே இந்த கைது இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய 34 வயதுடைய உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர் என அடையாளம் காணப்பட்டிருந்தார்.
அவரது காதலரான கன்னோருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர், சடலத்தை காரில் வைத்துவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரர் நுவரெலியா பொலிஸில் அளித்த முறைப்பாட்டில், அவர் நுவரெலியாவில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்ததுடன் பல நாட்களாக உணவு அருந்தவில்லை என தெரிவித்திருந்தார்.
பின்னர் ஆய்வு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளில், ஜூன் 16 ஆம் திகதி இரவு சுமார் 9.50 மணியளவில் அவரது காதலர் விடுதிக்கு வந்து சுமார் 40 நிமிடங்கள் தங்கியிருந்ததும், இரவு 10.30 மணியளவில் மயக்க நிலையிலிருந்த அவரை வெளியே கொண்டு சென்றதும் பதிவாகியிருந்தது.
அதனைத் தொடர்ந்து அவர் பெண்ணை காரில் ஏற்றி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதுடன், பின்னர் சடலம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
