கோட்டவெஹெர பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாகக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிய சம்பவம் தொடர்பாக 47 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலுகொல்ல பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் நேற்று (23) பிற்பகல் நிக்கவெரட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் மூலம் காணொளியை பதிவு செய்து பரப்பியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் கடந்த மே 16 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் கோட்டவெஹெர பொலிஸார் பாலுகொல்ல பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, ஐஸ் போதைப்பொருளின் சிறிய அளவுடன் 19 மற்றும் 28 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மஹா உஸ்வெவ பகுதியைச் சேர்ந்த அவர்கள் மே 17 ஆம் திகதி நிக்கவெரட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், மே 21 ஆம் திகதி குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் போது, ஐந்து பேர் சட்டவிரோதமாக ஒன்றுகூடி பொலிஸாரின் கடமைகளுக்கு தடையாக நடந்துகொண்டதுடன், வன்முறையான செயல்களிலும் ஈடுபட்டு சம்பவத்தை காணொளியாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதுடன், அது தெரணியகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வேறு ஒரு சம்பவத்துடன் தவறாக தொடர்புபடுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஏனைய நான்கு சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
