2026ஆம் ஆண்டு நெல்லுக்கான கேள்வி 2.8 மில்லியன் மெற்றிக் டொன்னாக காணப்படுகின்ற நிலையில் 2.85 மில்லியன் மெற்றிக் டொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தேசிய மட்டத்தில் போதுமான நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில், வரையறுக்கப்பட்ட நிலையில் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே 2026ஆம் ஆண்டு அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (24) நடைபெற்ற அமர்வில் கடந்த மாதம் 6ஆம் திகதி இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
2025 (2026)ஆம் ஆண்டு பெரும்போக விவசாயத்தில் 2.8 மில்லியன் மெற்றிக் டொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு நெல்லுக்கான கேள்வி 2.8 மில்லியன் மெற்றிக்டொன்னாக காணப்படுகின்ற நிலையில் 2.85 மில்லியன் மெற்றிக் டொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தேசிய மட்டத்தில் போதுமான நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில், வரையறுக்கப்பட்ட நிலையில் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே 2026ஆம் ஆண்டு அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படாது.
தற்போதைய விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான உரத்தை கமநல அபிவிருத்தி மத்திய நிலையம் ஊடாக பெற்றுக்கொள்வதற்கு உரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒருசில பகுதிகளில் உர விநியோகத்தில் தட்டுப்பாடு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. அவற்றுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்க நிறுவன மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் உற்பத்தி செலவுக்கு அமைய விலைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
