எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தை மேற்கொள்வதற்கு தனியார் பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
அதன்படி, பஸ் கட்டணங்கள் 15 முதல் 20 வரையான சதவீதத்தால் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன், தற்போதைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 35 அல்லது 40 ரூபாய் வரை உயரக்கூடும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
உலக சந்தையில் தற்பொழுது எரிபொருள் விலைகள் குறைவடைந்தாலும் அல்லது எதிர்காலத்தில் டீசல் விலை குறைந்தாலும், அடுத்த 6 மாதங்களுக்கு பஸ் கட்டணங்களை எக்காரணம் கொண்டும் குறைக்கப் போவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படுவது வழமையாகும்.
அதற்கமைய, ஜூலை 01 முதல் இம்முறை கட்டண அதிகரிப்பை அமுல்படுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக டொலரின் மதிப்பு உயர்வு மற்றும் ஏனைய செலவீனங்கள் அதிகரித்ததன் காரணமாக பஸ் தொழில்துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்துள்ளதுடன், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு சுமார் 60 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நட்டத்தை ஈடுகட்டும் வகையிலேயே இலங்கையிலுள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட பஸ் கட்டண நிலைகளும் இம்முறை அதிகரிக்கப்படவுள்ளன.
வருடாந்த பஸ் கட்டண நிர்ணயம் என்பது வெறும் டீசல் விலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. பஸ்ஸிற்கான லீசிங் கட்டணம், உதிரிப்பாகங்களின் விலைகள், தினசரி பராமரிப்புச் செலவுகள் மற்றும் பழுதுபார்ப்புச் செலவுகள் உட்பட 12 முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கட்டணம் கணக்கிடப்படுகிறது.
டீசல் என்பது அதில் ஒரு காரணி மாத்திரமே என்பதால், தொழில்துறையை வீழ்ச்சியடையாமல் பாதுகாப்பதற்காக அடுத்த 6 மாதங்களுக்கு டீசல் விலை குறைந்தாலும் கட்டணத்தைக் குறைக்கப் போவதில்லை என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்கம் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வருடாந்தம் சுமார் 800 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆனால் 13,500 பஸ்களை இயக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எவ்வித மானியமும் அல்லது நிதியுதவியும் வழங்கப்படுவதில்லை.
அரசாங்கத்திடமிருந்து தமக்கு எந்தவிதமான ஆதரவும் கிடைக்காத நிலையில், இந்த வருடாந்த பஸ் கட்டண அதிகரிப்பு மட்டுமே தங்களது தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரே வழி ஆகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
