கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, சுமார் 42 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற சீன நாட்டு பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை (29) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், கிரீன் சேனல் வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வெளியேற முயன்ற குறித்த பெண் பயணி, சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டபோதே வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய சீன நாட்டு பெண் தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் இன்றைய தினம் அதிகாலை 12.30 மணியளவில் சீனாவின் குன்மிங் நகரிலிருந்து சைனா ஈஸ்டர்ன் விமானச் சேவைக்கு சொந்தமான MR-6017 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளில், மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 28,000 சிகரெட்டுகளைக் கொண்ட 140 சிகரெட் கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 42 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சீனப் பெண்ணை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் காவலில் வைத்துள்ளதோடு, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
