மட்டக்களப்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மூன்று கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி. சந்திரகாந்தன் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவரும் இன்று (30) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதவான், பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணையின் அடிப்படையில், பிள்ளையான் கடந்த 2025 ஏப்ரல் 7 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மட்டக்களப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மூன்று கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக CID நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த வழக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோரும் முன்னதாகவே கைது செய்யப்பட்டிருந்தனர்.
இன்றைய நீதிமன்ற விசாரணையின் போது, பிள்ளையானின் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், அவரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் தங்க வைக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். மேலும், சந்தேகநபரான முகமட் சகீத் வாக்குமூலம் வழங்க கால அவகாசம் கோரியதையடுத்து, அதற்கான அனுமதியையும் நீதவான் வழங்கினார்.
இதனிடையே, பிள்ளையானுக்கு எதிராக கல்லடி பாலம் அருகே தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்து வேலிகளை அகற்றியதாக தொடரப்பட்டுள்ள மற்றொரு வழக்கு எதிர்வரும் ஜூலை 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிள்ளையானை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்ததை முன்னிட்டு நீதிமன்ற வளாகம் முழுவதும் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். நீதிமன்றத்துக்கு வருகை தந்த அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
விசாரணை முடிந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிள்ளையான், “எல்லாம் பொய்… அனுரவின் வாயைப் போல பொய் குற்றச்சாட்டு” என தெரிவித்தார்.
