நீதிபதிகள் மற்றும் நீதித்துறை தொடர்பான கவலைகள், அரசியலமைப்பு மற்றும் சட்டத்தில் நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு அமைவாக நியாயமான முறையில் கையாளப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சரிபார்க்கப்படாத தனிப்பட்ட தாக்குதல்கள், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்றும் சங்கம் எச்சரித்துள்ளது.
நீதித்துறையும் பொதுஅதிகாரத்தைப் பயன்படுத்தும் ஏனைய நிறுவனங்களைப் போன்று சட்டபூர்வமான ஆய்வு மற்றும் பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள சங்கம், நீதிமன்றத் தீர்ப்புகள், நீதிபதிகளின் நடத்தை மற்றும் நீதி நிர்வாகம் ஆகியவை உண்மை அடிப்படையிலானதும் பொறுப்பானதுமான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் உள்ளிட்ட எந்தவொரு நீதிபதி மீதும் நம்பகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக பொருத்தமான அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் மூலம் அவை புறநிலையாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22ஆவது திருத்தம் தொடர்பான விவாதங்கள் இடம்பெற்று வரும் பின்னணியிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தம் நீதித்துறை சுதந்திரம் மற்றும் பொதுமக்களின் உரிமைகள் தொடர்பில் கவலைகளை ஏற்படுத்துவதாகக் கூறி, சட்டத்தரணிகள் சங்கம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அதன் அரசியலமைப்புச் சட்டத்தன்மையையும் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நீதித்துறை தொடர்பான குற்றச்சாட்டுகள் நாடாளுமன்றத்திலும் சமூக ஊடகங்களிலும் முன்வைக்கப்பட்டாலும் அவை பொறுப்புடன் கையாளப்பட வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நீதித்துறையின் பங்கு மற்றும் சுதந்திரத்தை மதித்து, உண்மையான கவலைகள் அனைத்தும் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தில் நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு அமைவாக நியாயமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என அரச நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் ஊடகங்களிடம் சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
