நடப்பு ஆண்டின் அடுத்த 6 மாத காலப்பகுதிக்கும் நீர் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஆண்டின் முதல் 6 மாதங்களில் நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காக நீர்வழங்கல் சபைக்கு பெருமளவிலான செலவுகள் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர், இதன் காரணமாக நீர் கட்டணத்தை அதிகரிக்கவேண்டிய தேவை ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக ஆண்டுக்கு இருமுறை நீர் கட்டணங்கள் மறுசீரமைக்கப்படுவது வழக்கமாகும். எனினும், நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கும் கட்டண அதிகரிப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான அடுத்த 6 மாத காலப்பகுதியிலும் கட்டணங்கள் உயர்த்தப்படுமா என்பது குறித்து தெரிவிக்கும் போதே இதனை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மின் கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்ட போதிலும், நீர்க் கட்டணத்தின் மொத்த செலவில் மின்சாரத்துக்கான பங்களிப்பு 12% மட்டுமே ஆகும்.
இதன் மூலம் ஒரு நீர் அலகுக்கான செலவு வெறும் 2.50 ரூபா போன்ற மிகக் குறைந்த அளவிலேயே அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பானது நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் எவ்வித நேரடி தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.இதன் அடிப்படையில், கடந்த 6 மாத காலப்பகுதியில் செலவுகள் மிகக் குறைந்த அளவிலேயே அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மீது சுமையை ஏற்றாமல் அடுத்த 6 மாதங்களுக்கும் நீர் கட்டணத்தை தற்போதைய மட்டத்திலேயே பேண அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.
