அரசாங்கத்தின் டெங்கு ஒழிப்பு கொள்கையானது மிகவும் பலவீனமானதாகக் காணப்படுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சுகாதாரத் துறையினர் மீது மாத்திரம் விரல் நீட்டுவதை விடுத்து, அதிகளவிலான டெங்கு பரவலைக் கொண்டுள்ள மேல் மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களைப் பலப்படுத்தும் வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்திருக்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க ஒடுக்குமுறைக்கு எதிராக, கூட்டுத் தொழிற்சங்க சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டம் தொடர்பில், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (1) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று நாளாந்தம் சுமார் 1000 டெங்கு நோயாளர்கள் வரை அதிகரித்து வருகின்றனர். இதனால் நாட்டின் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 55,000ஐத் தாண்டியுள்ளதுடன், இதுவரை 32 மரணங்களும் பதிவாகியுள்ளன. குறிப்பாக 14 நிர்வாக மாவட்டங்களிலுள்ள 538 கிராம சேவகர் பிரிவுகளில் இப்பிரச்சினை பாரியளவில் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம ஏற்கனவே எச்சரித்துள்ளதுடன், ‘பிரெட்டோ சுட்டெண்’ அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விபரீதம் குறித்து அரசியல் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே அறிவித்த போதிலும், அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. அவர்களின் இந்த அலட்சியப் போக்கின் காரணத்தினாலேயே இன்று டெங்கு அரக்கன் மீண்டும் தலைதூக்கியுள்ளார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் சுகாதாரத் துறையினர் மீது மாத்திரம் விரல் நீட்டுவதை விடுத்து, அதிகளவிலான டெங்கு பரவலைக் கொண்டுள்ள மேல் மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களைப் பலப்படுத்தும் வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்திருக்க வேண்டும்.
தொழிலாளர் உரிமைகளுக்காக மேடைகளில் குரல் கொடுத்த கடுவலை மேயர், இன்று கடுவலை நகரை இலங்கையிலேயே மிகவும் அசுத்தமான பகுதியாகவும், ஒரு டெங்கு குகையாகவும் மாற்றியுள்ளார் என்றார்.
