அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது மடிக்கணினி (Laptop) மற்றும் கையடக்கத் தொலைபேசியின் கடவுச்சொற்களை (Passwords) வழங்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மதிப்பதாகத் தெரிவித்த பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, எனினும் அவற்றை வழங்காமல் இருப்பதற்காக அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சந்தேக நபர் ஒருவரை வற்புறுத்துவதற்கு நீதிமன்றத்திற்குக்கூட உரிமையில்லை என்பது ஒட்டுமொத்த உலகமும் ஏற்றுக்கொண்ட ஒரு கோட்பாடாகும் எனக் கூறினார்.
இந்தக் கடவுச்சொற்களை வழங்காமல் இருப்பதற்கு நான்கு நியாயமான காரணங்கள் உள்ளதாக உதய கம்மன்பில இங்கு சுட்டிக்காட்டினார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின்படி, சந்தேக நபர் ஒருவர் தமக்கு எதிராக நடத்தப்படும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டிய எந்தவொரு சட்டக் கடப்பாடும் இல்லை என்பது முதலாவது காரணம் என அவர் குறிப்பிட்டார்.
சட்டத்தின்படி கடவுச்சொற்களை வழங்குமாறு எவருக்கும் அழுத்தம் கொடுக்கவோ அல்லது பலவந்தப்படுத்தவோ முடியாது என்றும், அது ஒரு முறையற்ற செல்வாக்குச் செலுத்தல் ஆகும் என்றும் உதய கம்மன்பில இரண்டாவது காரணியாகத் தெரிவித்தார்.
தற்போது அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சிறில் காமினி அருட்தந்தை உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஊடகங்கள் வாயிலாக அத்தகைய முறையற்ற அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
குறித்த கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினியில் புலனாய்வுத் தகவல் வழங்குநர்கள் பற்றிய அதிமுக்கியமான மற்றும் உணர்திறன்மிக்க தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை மூன்றாவது காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
