மட்டக்களப்பு சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 14 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாததைக் கண்டித்து, “திருவிழா வேண்டாம்; கும்பாபிஷேகம் வேண்டும்” என்ற கோரிக்கையுடன் பொதுமக்கள் இன்று (27) ஆலய முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இளம் சைவ மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆலய நிர்வாக சபை வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு, உடனடியாக கும்பாபிஷேகத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டிய நிலையில், 14 ஆண்டுகள் கடந்தும் அது நடைபெறவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். இதனால் ஆலய சிலைகள் சேதமடைதல், மின்சார வசதிகள் பழுதடைதல், கூரை ஓடுகள் உடைதல் உள்ளிட்ட பல குறைபாடுகள் நிலவுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக கும்பாபிஷேகம் நடத்துவதாக ஆலய நிர்வாகம் பலமுறை உறுதியளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், நிரந்தரத் தீர்வு கோரி மகஜரையும் அதிகாரிகளிடம் கையளித்தனர்.
இதையடுத்து போராட்ட இடத்துக்கு வந்த மத மற்றும் கலாச்சார பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர், ஒரு வாரத்திற்குள் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாலஸ்தாபனம் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றும் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கலைந்தது.
