இலங்கையில் டெங்கு காய்ச்சல் பரவல் இந்த ஆண்டு வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (03) நள்ளிரவு வரையிலான தரவுகளின்படி, நாடு முழுவதும் 58,810 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 39 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. தற்போது டெங்குவின் உயிரிழப்பு விகிதம் 0.07% ஆக உள்ளது.
இந்த ஆண்டில் அதிகபட்சமாக கடந்த ஜூன் மாதத்தில் 21,547 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மே மாதத்தில் 8,590 பேரும், ஜனவரியில் 7,866 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில், ஜூலை மாதத்தின் முதல் மூன்று நாட்களிலேயே 3,422 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளமை கவலைக்கிடமானதாகும்.
மாகாண வாரியாகப் பார்க்கையில், மேல் மாகாணம் 30,876 நோயாளர்களுடன் (52.50%) அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தென் மாகாணத்தில் 9,316 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,129 பேரும் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
மாவட்ட அளவில் கொழும்பில் 12,017 பேரும் (இதில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 2,514 பேர்), கம்பஹாவில் 11,740 பேரும், மாத்தறையில் 4,262 பேரும் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 142 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு பரவும் உயர் அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த, வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், நீர் தேங்கும் இடங்களை அகற்றி நுளம்புகள் பெருகுவதைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
