மலையக பிரதேசங்களில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை (04) மாலை 5:30 மணி பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஹட்டன் – நுவரெலியா பாதையின் போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்றைய தினம் முழுவதும் ஹட்டன் பகுதியில் பெய்த பலத்தமழையினால், குடகம பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த மண்சரிவினால் வீதியில் போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள மண் மேட்டினை அகற்றும் பணி நடைபெற்று வருவதாக நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியாளர் பிரிவினர் தெரிவித்தனர்.

கடந்த நாட்களில் நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், இப்பகுதியில் பல இடங்களில் மண்சரிவுக்கான அறிகுறியாக அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
