மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர துடுப்பாட்ட வீரர் பாபர் அசாம் மீண்டும் டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளியியலில் அணியின் நிலையை வலுப்படுத்தும் நோக்கில், ஷான் மசூதிற்குப் பதிலாக அவர் இந்த பொறுப்பை ஏற்றுள்ளார்.
தேர்வுக்குழுவினர் அணியில் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளதுடன், நான்கு அறிமுக வீரர்களையும் சேர்த்துள்ளனர்.
இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அலி உஸ்மான், துடுப்பாட்ட வீரர் மொஹமட் அவாய்ஸ் ஜாபர், வேகப்பந்து வீச்சாளர் உபெய்ட் ஷா மற்றும் விக்கெட் காப்பாளர் மொஹமட் காசி கோரி ஆகியோரே அந்த நான்கு வீரர்களாவர்.
ஷான் மசூதின் தலைமைத்துவ காலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் சவாலான ஒன்றாக அமைந்தது.
அவர் தலைமையில் விளையாடிய 16 டெஸ்ட் போட்டிகளில் 12 போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது.
மேலும், இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 7 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
