இலங்கையில் பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை மற்றும் குற்றக் கும்பலினருடன் தொடர்புகளை பேணியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட அதிகாரிகள் ஒரு பகுதியினர் என அமைச்சர் கூறியுள்ளார்.
அதேவேளை, கடமையைப் புறக்கணித்தமை மற்றும் இலஞ்சம் பெற்றமை போன்ற குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட அதிகாரிகளும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராகப் பெறப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் விரைவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
