நியூசிலாந்தில் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றிய இலங்கையரான பராமரிப்பாளர் ஒருவருக்கு, வயதான பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் மற்றொரு பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நிலுஷன் ஜயங்க சில்வா கிந்தோட்ட விதானகே என்பவருக்கு கிறைஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்றம் கடந்த மே மாதம் இந்தத் தண்டனையை விதித்தது. அவரது அடையாளத்தை வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருந்த நீதிமன்ற உத்தரவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது பெயர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
முதியோர் பராமரிப்பு நிலையத்தில் வசித்த இரண்டு, வயதான பெண்கள் தொடர்பாக ஒரு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு மற்றும் இரண்டு சட்டவிரோத பாலியல் தொடர்பு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற பராமரிப்பு நிலையத்தின் பெயர் நீதிமன்ற உத்தரவின்படி வெளியிடப்படவில்லை.
தண்டனை வழங்கிய நீதிபதி ஜேன் பாரிஷ், பாதிக்கப்பட்ட பெண்கள் உடல் மற்றும் மனநிலை காரணமாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்ததாகவும், அவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்த பராமரிப்பாளர் அந்த நம்பிக்கையை மோசமாக மீறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனுடன் தொடர்பில்லாத மற்றொரு வழக்கில், 11 வயது சிறுமியிடம் காரை நிறுத்தி சிகரெட் மற்றும் பயண வசதி வழங்க முன்வந்து, வாகனத்தில் ஏறுமாறு கூறி அச்சுறுத்திய குற்றச்சாட்டையும் விதானகே ஒப்புக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சிறுமி அங்கிருந்து தப்பி, வாகனத்தின் பதிவு எண்ணை குறித்து தனது தாயிடம் தெரிவித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
குற்றச்செயல்களுக்கு எந்தவித வருத்தமும் வெளிப்படுத்தாததுடன், பாலியல் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வந்ததாக நீதிபதி குறிப்பிட்டார். விதிக்கப்பட்ட தண்டனையில் மூன்றில் ஒரு பகுதியை அனுபவித்த பின்னர் அவரை இலங்கைக்கு நாடுகடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பராமரிப்பு நிலையத்துடன் தொடர்புடைய மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக நம்பவில்லை என நியூசிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் முன்வருமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
