அவிசாவளை டிப்போவுக்கு சொந்தமான, கொழும்பிலிருந்து ஹட்டன் வழியாக மஸ்கெலியாவுக்கு தினமும் இரவு 11.00 மணிக்கு இயக்கப்பட வேண்டிய அரசுப் பேருந்து சேவையில் நேற்று (08) ஏற்பட்ட குளறுபடியால் பயணிகள் பல மணி நேரம் கடும் அசௌகரியத்திற்கு உள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பயணிகளின் தகவலின்படி, முன்கூட்டியே கட்டணம் செலுத்தி பயணச்சீட்டுகளை பெற்றிருந்த போதிலும், குறித்த நேரத்தில் பேருந்து கொழும்பு மத்திய பேருந்து நிலையத்துக்கு வரவில்லை. இதையடுத்து பயணிகள் முறையிட்டதைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேர தாமதத்திற்குப் பிறகு மாற்றுப் பேருந்து ஒன்று இயக்கப்பட்டது.
ஆனால், அந்தப் பேருந்து மஸ்கெலியா வரை செல்லாமல் ஹட்டன் வரை மட்டுமே சேவையாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாலை சுமார் 3.00 மணியளவில் ஹட்டனில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து திரும்பிச் சென்றதால், மஸ்கெலியா உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் காலை 6.00 மணி வரை போக்குவரத்து வசதியின்றி பெரும் சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த இரவு பேருந்து சேவை சமீபத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அதனை உரிய திட்டமிடலுடனும் பொறுப்புடனும் இயக்க அதிகாரிகள் தவறியுள்ளதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இரவு நேர பணிக்குச் செல்வோர், அவசர தேவைகளுக்காக பயணிப்போர் மற்றும் தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சேவையை பெரிதும் நம்பியிருப்பதால், இத்தகைய அலட்சியங்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, கொழும்பு–ஹட்டன்–மஸ்கெலியா இரவு அரசுப் பேருந்து சேவையை நேரத்துக்கு ஏற்றவாறும் இடையூறின்றியும் தொடர்ந்து இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
