2019 ஆம் ஆண்டுடன் திறைசேரி மின்னஞ்சல் கட்டமைப்பு காலாவதியாகியுள்ள நிலையில், காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பே இதுநாள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க நிதிப் பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா திறைசேரியின் அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளார்.
அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்ற கட்டத் தொகுதியில் கூடியது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க , திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும உட்பட திறைசேரியின் உயர் அதிகாரிகள் முன்னிலையாகியிருந்தனர்.
திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்டமை குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்பு மூன்றாம் தரப்பினரால் ஹேக் செய்யப்பட்டமை தொடர்பிலும், மின்னஞ்சல் கட்டமைப்பு இறுதியாக எப்போது எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த திறைசேரியின் அதிகாரிகள் இந்த மின்னஞ்சல் கட்டமைப்பு 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் இறுதி பயன்பாட்டுக் காலம் 2019 ஆம் ஆண்டு வரை செல்லுபடியாக காணப்பட்டது என்றனர்.
தொடர்ந்து கேள்வியெழுப்பிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா,அவ்வாறாயின் சேவை முடிவடைந்த மின்னஞ்சல் கட்டமைப்பில் இருந்தா வெளிநாட்டு கடன் விவகாரங்களுக்கான மின்னஞ்சல் செய்தி அனுப்பப்பட்டது என வினவினார்.
இதற்கு பதிலளித்த அதிகாரிகள், ஆம், சேவை முடிவடைந்த மின்னஞ்சல் கட்டமைப்பே பயன்படுத்தப்பட்டது.
வருடாந்த கணக்காய்வு செய்யப்பட்டதா, வேண்டிய நபர்கள் இந்த மின்னஞ்சல் கட்டமைப்புக்குள் உள்நுழையும் அசாதாரன நிலையா காணப்பட்டது. நீங்கள் என்ன செய்தீர்கள். உறங்கிக் கொண்டு இருந்தீர்களா என காரசாரமாக கலாநிதி ஹர்ஷ டி சில்வா அதிகாரிகளை சாடினார்.
இதற்கு பதிலளித்த அதிகாரிகள், நாங்கள் இந்த விடயம் தொடர்பில் 2019 ஆம் ஆண்டில் இருந்து உரிய தரப்பினருக்கும், அமைச்சுக்கும் குறிப்பிட்டு வருகிறோம். அதுபோல பாதுகாப்பு தொடர்பான அவதான நிலை தொடர்பிலும் அறிவுறுத்தியுள்ளோம் என பதிலளித்தனர்.
