ஈரான் இராணுவமும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையும் (IRGC) இணைந்து மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க மற்றும் கூட்டணி இராணுவத் தளங்கள் மீது பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக ஈரானின் Nour News செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளியிட்ட தகவலின்படி, பஹ்ரைனில் உள்ள ஷேக் ஈசா விமானப்படைத் தளம், குவைத்தில் உள்ள அலி அல்-சலேம் மற்றும் அஹ்மத் அல்-ஜாபர் விமானப்படைத் தளங்கள், ஜோர்டானில் உள்ள பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளம் ஆகியவை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் எரிபொருள் களஞ்சியங்கள், Patriot வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் அமைப்புகள், ட்ரோன் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் IRGC தெரிவித்துள்ளது.
அத்துடன், ஹோர்முஸ் கடல்சந்தியில் அமெரிக்காவின் இராணுவ தலையீடு தொடர்ந்தால் அதற்கு கடுமையான பதிலடி வழங்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதுடன், தனது பதிலடி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
