கிண்ணியா பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யச் சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜன்ட்டுக்கு உப பொலிஸ் பரிசோதகர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையின் கந்தளாய் முகாமில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் (67763) டி.பி. ரணசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 12 ஆம் திகதி கின்னியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டோரை கைதுசெய்ய சென்றிருந்தார். இதன்போது மஹாவலி கங்கையின் நீர்ரோட்டத்தில் சிக்கி அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கடமையின் போது விபத்தில் உயிரிழந்த குறித்த அதிகாரியின் சேவையைப் பாராட்டி, அரச நிர்வாக சுற்றறிக்கைகளுக்கு அமைவாக பொலிஸ் மா அதிபரால் இந்த விசேட பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
12 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பொலிஸ் சார்ஜன்ட் பதவியிலிருந்து உப பொலிஸ் பரிசோதகர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
