வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தமது அதிகாரிகள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) கவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை 7ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம், தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி சென்று பார்வையிடும் ஆணைக்குழுவின் சட்டபூர்வ அதிகாரத்தை மீறும் நடவடிக்கையாக இருக்கலாம் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுத் தலைவர் நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய தலைமையில் ஜூலை 14ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளனர்.
சிறைச்சாலையில் நிலவிய பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாகவே அதிகாரிகளை உள்ளே அனுமதிக்க முடியவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும், அதற்கான காரணங்களை முன்கூட்டியே ஆணைக்குழுவுக்கு அறிவிக்காதமை தொடர்பில் ஆணைக்குழு திருப்தியடையவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து மாற்றப்பட்ட கைதிகள் எதிர்கொள்ளும் நிலைமை குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
கைதிகள் மீது பழிவாங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல், சித்திரவதைகள், மருத்துவ வசதிகள் மறுக்கப்படுதல், குடும்பத்தினருக்கு கைதிகளின் இருப்பிடம் தொடர்பான தகவல்கள் வழங்குவதில் தாமதம் மற்றும் தண்டனைக் காலம் நிறைவடைந்த பின்னரும் சிலர் தடுத்து வைக்கப்படுவது தொடர்பிலும் ஆணைக்குழு கவலை தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சிறைச்சாலைகள் உள்ளிட்ட தடுப்பு நிலையங்களுக்கு சட்டப்படி நுழையும் தமது அதிகாரத்தை மதித்து செயற்பட வேண்டும், மாற்றப்பட்ட கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் தண்டனை காலம் நிறைவடைந்த கைதிகளை உரிய முறையில் விடுதலை செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
