கொழும்பு நகரில் வாகன நிறுத்துமிடக் கட்டணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
வாகன நிறுத்துமிடக் கட்டண வசூல் வழமைபோன்று தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக மாநகர சபை அறிவித்துள்ளது.
கட்டணங்கள் நிறுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகள் போலியான தகவல்களை பரப்புவதாகவும், அவை கடந்த மார்ச் மாதம் எரிபொருள் நிலையங்களில் ஏற்பட்ட நீண்ட வரிசை நெரிசலைக் குறைப்பதற்காக தற்காலிகமாக கட்டண வசூல் நிறுத்தப்பட்ட காலப்பகுதியில் பதிவான பழைய காணொளிகள் எனவும் சபை தெரிவித்துள்ளது.
QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறை மற்றும் வாகன இலக்க முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் நிலைமை சீரடைந்ததால், மார்ச் 23 ஆம் திகதி முதல் மீண்டும் வாகன நிறுத்துமிடக் கட்டண வசூல் ஆரம்பிக்கப்பட்டதாக கொழும்பு மாநகர சபை குறிப்பிட்டுள்ளது.
எனவே, கொழும்பு நகரில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகள், வழமைபோன்று உரிய கட்டணங்களை செலுத்துமாறு மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.
