அரசாங்கத்தின் ‘மிதுரு புரவர’ (Mithuru Purawara) திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள 25 நகரங்களில் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் மதிப்பிடப்பட்ட 581 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உள்ளூர் சமூகங்களின் வசதிகள் மற்றும் நல்வாழ்வுக்காக சிறிய நகரங்களை மேம்படுத்தும் நோக்குடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) கீழ் இந்த வேலைத்திட்டம் முன்மொழியப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு முன்னுரிமை அபிவிருத்தித் திட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்தத் திட்டங்களை 2026 ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்திக்காக 25 நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், முதற்கட்டமாக 23 நகரங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் ஊடாக நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவிற்கே இவ்வாறு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
