எப்பாவல நகர் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையமொன்றின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து, 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் 14 வயதுடைய பௌத்த அறநெறி பாடசாலை மாணவர்கள் இருவரை எப்பாவல பொலிஸார் நேற்று (17) கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் எப்பாவல , எந்தகல பகுதியில் உள்ள பௌத்த அறநெறி பாடசாலையில் தங்கியிருந்து கல்வி கற்று வரும், தலாவ – நபடவெவ மற்றும் எப்பாவல – ரொட்டவெவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
கடந்த 4ஆம் திகதி அதிகாலை வேளையில் எப்பாவல நகரின் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்திற்கு விபரங்களைச் சமர்ப்பித்த பொலிஸார், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அத்துடன் தம்புத்தேகம பொலிஸ் பிரிவின் ‘ஜொனி’ என்ற மோப்ப நாய், விரல் அடையாளப் பிரிவு அதிகாரிகளின் உதவிகள் மற்றும் திருடப்பட்ட தொலைபேசிகளின் IMEI எண்கள், சிம் அட்டைகளின் சிக்னல் கோபுரத் தரவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட நீண்ட விசாணைகளின் பின்னரே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்படும் போது அவர்களிடமிருந்து 1,074,930 ரூபா பெறுமதியான 6 அதிநவீன கையடக்கத் தொலைபேசிகள் 5,000 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சிறுவர்கள் இருவரும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகியிருந்தமையே இந்தத் திருட்டிற்கு பிரதான காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபரான மாணவன் ஒருவன் சம்பவத்திற்கு முந்தைய நாள் இக்கடைக்கு வந்து ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசி ஒன்றின் விலையைக் கேட்டுவிட்டு, அதனைத் தனக்கு வாங்கித் தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளார். எனினும், தந்தை அதனை வாங்கித் தராத காரணத்தினாலேயே இவர்கள் இருவரும் இணைந்து இத்திருட்டை அரங்கேற்றியுள்ளனர்.
திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளில் இரண்டை இவர்கள் தங்களது பாவனைக்காக வைத்துக் கொண்டதுடன், ஏனைய கையடக்கத் தொலைபேசிகளை பௌத்த அறநெறி பாடசாலையில் உள்ள பௌத்த துறவி ஒருவருக்கும், தனது தந்தைக்கும் மற்றும் சில நண்பர்களுக்கும் பகிர்ந்தளித்துள்ளனர்.
இதில் திருடப்பட்ட ஒரு கையடக்கத் தொலைபேசியில் விஹாரையின் துறவி ஒருவருடைய சிம் அட்டை இடப்பட்டு பயன்படுத்தப்பட்ட போதே, அதன் சிக்னல் தரவுகள் ஊடாக பொலிஸார் சந்தேகநபர்களைக் துல்லியமாகக் கண்டறிந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான சிறுவர்கள் இருவரும், கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களுடன் இன்று (18) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.
எப்பாவல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் மேற்கொண்டு வருகின்றனர்.
