டொனால்ட் ட்ரம்ப்பின் ‘ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளம், முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் வர்த்தகர்களுக்கு ஒரு புதிய கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட மிக முக்கியமான 10 கணக்குகளின் பதிவுகளை, மற்றவர்களை விட மிக வேகமாகப் பெறுவதற்காக, மாதத்திற்கு 100,000 அமெரிக்க டொலர் வரை கட்டணம் வசூலிக்க அந்த நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
‘Truth API’ எனப்படும் இந்த தரவுத் தொகுப்பு மூலம், வர்த்தக நிறுவனங்கள் மில்லி செக்கன்ட் இடைவெளியில் பதிவுகளைப் பெற்று, சந்தை மாற்றங்களை சாதகமாக்கிக்கொள்ள முடியும்.
3 வருட ஒப்பந்தத்திற்கு மாதாந்தம் 60,000 டொலர் என்ற தள்ளுபடி விலையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் ஜனநாயகக் கட்சியினர் இந்த திட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஜனாதிபதி பதவியைப் பயன்படுத்தி ட்ரம்ப் இலாபம் ஈட்டுவதாகவும், வோல் ஸ்ட்ரீட் வர்த்தகர்களை செழுமைப்படுத்துவதாகவும் செனட்டர் எலிசபெத் வோரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ட்ரம்பின் பதிவுகளை வேகமாக பெறப் பணம் செலுத்துவது “மிகவும் நெறிமுறையற்ற செயல்”என கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இருப்பினும், சட்ட ரீதியாக இது எந்தளவுக்குப் பொருந்தும் என்பதில் தெளிவின்மை நிலவுகின்றது.
இந்தநிலையில் 2026 ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இந்த சேவை நடைமுறைக்கு வரவுள்ளது.
