மட்டக்களப்பில் முல்லைத்தீவு செஞ்சோலையில் உயிரிழந்த 61 சிறுவர்களின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (14) உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் சுடர் ஏற்றி, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, செஞ்சோலை சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் திருவுருவப் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதைக்கு முன்பாக சுடர் ஏற்றி, உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
