வவுனியா மாவட்டம், வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு கிராம அலுவலர் பிரிவில் வாழும் மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்ட பெரியகட்டு சமூக நீர் வழங்கல் திட்டம் அண்மையில் (17) மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டது.
தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் 31 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெரியகட்டு கிராமத்தைச் சேர்ந்த 185 குடும்பங்களுக்குப் புதிய நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன், கணேசபுரம் உள்ளிட்ட அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 400 குடும்பங்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படவுள்ளதாகத் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
