நவகமுவ, கொரத்தொட்ட பகுதியில் கடந்த 16ஆம் திகதி நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களை ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (19) மாலை தெல்கொட மற்றும் வதுரமுல்ல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, படுகொலையில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திய ஓட்டுநர் மற்றும் குற்றத்திற்கு உதவி செய்த மற்றொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ரணால மற்றும் பள்ளம பகுதிகளைச் சேர்ந்த 21 மற்றும் 29 வயதுடைய இளைஞர்களாவர்.
அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
