அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (20) 3 சதவீதம் உயர்வடைந்துள்ளது.
இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90 அமெரிக்க டொலர்களைத் தாண்டி, 90.79 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது கடந்த ஜூன் 11ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச விலையாகும்.
அதேவேளை, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இடைநிலை (WTI) மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 84.68 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதுடன், இது ஜூன் 12ஆம் திகதிக்குப் பின்னரான உயர்ந்த விலையாகும்.
ஹோர்மூஸ் நீரிணை வழியாக நடைபெறும் எரிபொருள் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் அமெரிக்கா–ஈரான் இடையிலான தாக்குதல்கள் தொடர்வதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
உலக மசகு எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றும் ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக, உலக எரிசக்தி சந்தையிலும் அச்சநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
