ஆபிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டில் கடந்த 21 நாட்களுக்குள் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கனடாவிற்குள் நுழைய தற்காலிக தடை விதித்து கனடா அரசு அறிவித்துள்ளது.
கனடா பொதுச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த புதிய எல்லைக் கட்டுப்பாடுகள் இன்று இரவு (20) 11:59 மணி முதல் அமுலுக்கு வரும். இந்த விதிகளை மீறுவோருக்கு 150,000 கனேடிய டொலர் வரை அபராதமும், நிறுவனங்களுக்கு 1.5 மில்லியன் கனேடிய டொலர் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
எனினும், உலக சுகாதார அமைப்பு (WHO) பயண மற்றும் வர்த்தகத் தடைகள் எபோலா பரவலைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பலன் அளிக்காது என்றும், அவை தேவையற்ற அச்சம் மற்றும் பாகுபாடுகளை உருவாக்கக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது. WHO-வின் மதிப்பீட்டின்படி, கொங்கோவில் நிலவும் எபோலா பரவல் சர்வதேச அளவில் பரவும் அபாயம் தற்போது குறைவாகவே உள்ளது.
ஜூலை 15 நிலவரப்படி, கொங்கோவில் 2,100-க்கும் மேற்பட்ட எபோலா நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 828 பேர் உயிரிழந்துள்ளனர்.
எபோலா நோய் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் உடல் திரவங்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுவதன் மூலம் பரவுகிறது.
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளும் கொங்கோவில் இருந்து வருவோருக்கு இதேபோன்ற தற்காலிக கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளன.
மேலும், ஐரோப்பிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ECDC), பயணத் தடைகள் மனிதாபிமான உதவிப் பணிகளைப் பாதிக்கக்கூடும் என்பதால், அவை குறைந்த பலனளிக்கும் நடவடிக்கைகளாக இருக்கலாம் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
