இந்தியக் கல்வித் துறையில் நிலவும் ஊழல்களுக்கு எதிராகவும், போட்டிப் பரீட்சைகளில் இடம்பெற்ற வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலகக் கோரியும் டெல்லியில் பாரிய போராட்டம் வெடித்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தின் மழை காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் வழிநடத்தப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janta Party) அமைப்பைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரிலிருந்து (ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் முக்கிய இடம்) நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர்.
அதன்போது பேரணியைத் தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து, காவல்துறை தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர்.
ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பெயரை நகைச்சுவையாகக் கேலி செய்யும் விதமாகத் தங்களை ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்று அழைத்துக்கொள்ளும் இந்த இளைஞர் அமைப்பின் போராட்டம், எதிர்பார்க்கப்பட்டதை விடப் மிகப்பெரிய அளவில் இடம்பெற்றது.
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக மூன்று வாரங்களாக உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வந்த 59 வயதுடைய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் (Sonam Wangchuk) கடந்த சனிக்கிழமை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், இளைஞர்களின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது.
பேரணியின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் டெல்லியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
கடந்த மே மாதம் நடைபெற்ற மருத்துவ கல்லூரி நுழைவுக்கான ‘நீட்’ (NEET) பரீட்சை வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து, சுமார் 22 லட்சம் மாணவர்கள் மீண்டும் பரீட்சை எழுத நிர்பந்திக்கப்பட்டனர். நீண்ட மாதங்களாகப் படித்து பரீட்சை எழுதிய மாணவர்கள், பரீட்சை ரத்து செய்யப்பட்ட செய்தி கேட்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதில் மன உளைச்சலுக்கு ஆளான 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தவறான முடிவுகளை எடுத்த சம்பவமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவங்களின் போது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ஒருவர் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைக் ‘கரப்பான் பூச்சிகள்’ என உவமித்துக் கூறியதாகக் குறிப்பிடப்பட்ட நிலையில், இளைஞர்கள் அந்த வார்த்தையையே தங்களது அமைப்பின் பெயராக மாற்றிப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.
ஆரம்பத்தில் சமூக வலைத்தளங்களில் மீம்கள் (Memes) மூலம் தொடங்கப்பட்ட இந்த இணையவழிப் போராட்டம், தற்போது வீதிகளில் இறங்கிப் போராடும் பிரம்மாண்ட மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது.
