யுக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒரு இந்தியர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கினியா-பிசாவ் கொடியுடன், சோளச் சரக்குகளை ஏற்றிச் சென்ற ‘எம்.வி கோல்டன் லியோ’ எனும் சரக்குக் கப்பல் மீது கடந்த (19)ஆம் திகதி மாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷ்யா ஏவிய 3 குரூஸ் ரக ஏவுகணைகள் தாக்கியபோது கப்பல் தீப்பற்றிக்கொண்டது.
இதன்போது, குறித்த கப்பலில் 5 இந்தியர்கள் உட்பட 17 பணியாளர்களும் 1 கடல்சார் வழிகாட்டியும் இருந்துள்ளனர்.
மீட்புப் படையினரின் இரவோடு இரவான தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு 8 பேர் மீட்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் கடல்சார் வழிகாட்டி ஒருவர் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், வர்த்தகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கடல்சார் வர்த்தக சுதந்திரத்தைப் பாதிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஒடேசா பகுதியில் இந்த மாதத்தில் மட்டும் ரஷ்யத் தாக்குதல்களால் 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கருங்கடல் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையேயான வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
