ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி மாளிகைகளை பயன்படுத்துவதில்லை. இருப்பினும் இவை மக்களின் சொத்து ஆகவே அவற்றை பாதுகாப்பதற்கு முறையான வகையில் பராமரிக்க வேண்டும். இந்த மாளிகைகளை பயனுறுதிமிக்க வகையில் பயன்படுத்துவதற்கு உரிய திட்டங்கள் பொதுநிர்வாக அமைச்சினால் முன்னெடுக்கப்படுகிறது.சமூக வலைத்தளங்களில் வெளியாகும் சகல விடயங்களையும் உண்மை என்று ஏற்றுக்கொண்டு கேள்விகளை முன்வைப்பதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது 07 ஜனாதிபதி மாளிகைகள் காணப்படுகின்றன. கொழும்பு கோட்டை, கண்டி, நுவரெலியா, கதிர்காமம், அநுராதபுரம், மஹியங்கனை மற்றும் பெந்தொட்டை ஆகிய பகுதிகளில் ஜனாதிபதி மாளிகைகள் அமையப்பெற்றுள்ளன.
ஜனாதிபதி மாளிகை பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்காக 2019 ஆம் ஆண்டு 77.2 மில்லியன் ரூபா, 2020 ஆம் ஆண்டு 34.7 மில்லியன் ரூபா, 2021 ஆம் ஆ ண்டு 28.8 மில்லியன் ரூபா, 2022 ஆம் ஆண்டு 25.6 மில்லியன் ரூபா, 2023 ஆம் ஆண்ட 37.4 மில்லியன் ரூபா, 2024 ஆம் ஆண்டு 24.7 மில்லியன் ரூபா, 2025 ஆம் ஆண்டு 10.5 மில்லியன் ரூபா, 2026 ஆம் ஆண்டு ( ஜனவரி – ஜூன்) 3.4 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த ஜனாதிபதி மாளிகைகளை பயன்படுத்துவதில்லை. இருப்பினும் இவை மக்களின் சொத்து ஆகவே அவற்றை பாதுகாப்பதற்கு முறையான வகையில் பராமரிக்க வேண்டும். இந்த மாளிகைகளை பயனுறுதிமிக்க வகையில் பயன்படுத்துவதற்கு உரிய திட்டங்கள் பொதுநிர்வாக அமைச்சினால் முன்னெடுக்கப்படுகிறது.
ஜனாதிபதி மாளிகைகளை ஜனாதிபதி பயன்படுத்துவதில்லை. அவ்வாறாயின் ஏன் பராமரிப்புக்கு நிதி ஒதுக்கப்படுகின்றது என்று எதிர்க்கட்சியினர் கேள்வியெழுப்புகிறார்கள். பராமரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் இருந்தால் அரச சொத்து வீணடைவதற்கு இடமளிக்கப்படுகிறது என்றும் குற்றச்சாட்டுகிறார்கள்.
ஜனாதிபதி மாளிகை காடாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளதாக எதிர்க்கட்சியின் உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேள்வியெழுப்புகிறார். சமூக வலைத்தளங்களில் பல விடயங்கள் வெளியாகும்.
அவற்றின் உண்மை தன்மையை ஆராயும் திறன் இருக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அந்த திறனை மையப்படுத்தி செயற்படுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அமைச்சர்கள் எவரும் உத்தியோகபூர்வ அரச இல்லத்தில் வசிப்பதில்லை. அரச இல்லங்கள் அரச நிர்வாக கட்டமைப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆகவே அரச இல்லங்களை பயன்படுத்த போவதில்லை என்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்றார்.
