மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பகுதிகளில் உள்ள ஜூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களை இலக்காகக் கொண்டு, விசேட அதிரடிப்படை (STF) மற்றும் விமானப்படை உயர் அதிகாரி என போலியாக அறிமுகப்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் தொலைபேசி இலக்கத்துடன் விளம்பரப்படுத்தப்பட்டிருந்த 6 கடைகளை தொடர்புகொண்ட மர்மநபர், வவுணதீவு முகாமில் 60 பேருக்கான பயிற்சிக்காக ஜூஸ் மற்றும் உணவுப் பொருட்கள் தேவைப்படுவதாகக் கூறி ஆர்டர்கள் வழங்கியுள்ளார்.
பின்னர், “கேக் ஆர்டர் செய்தவருக்கு உடனடியாக பணம் அனுப்ப வேண்டும்; பின்னர் முழுத் தொகையையும் வழங்குகிறேன்” என்று கூறி, கடை உரிமையாளர்களை குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பச் செய்துள்ளார்.
இதன்படி, ஒரு ஜூஸ் கடை உரிமையாளர் ரூ.9,800-ஐ அனுப்பி, பின்னர் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களுடன் வவுணதீவு பகுதிக்கு சென்றபோது அங்கு எந்த படை முகாமும் இல்லையென அறிந்து ஏமாற்றப்பட்டுள்ளார்.
இதே முறையில், மட்டக்களப்பிலுள்ள சர்வதேச உணவகம் ஒன்றில் ரூ.21,000 மற்றும் மேலும் மூன்று கடைகளில் தலா ரூ.9,800 வீதமும் மோசடி செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காத்தான்குடியிலும் இரு கடை உரிமையாளர்கள் இதே மோசடிக்கு இலக்காகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
