கொழும்பு துறைமுக நகர (port city ) வளாகத்தில் இரண்டு சீனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோதல், கடத்தல் மற்றும் சீன நாட்டவர் ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் 2 சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு போர்ட் சிட்டி வளாகத்தில் கடந்த புதன்கிழமை (22) இரவு இடம்பெற்ற கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட சீன நாட்டவர் ஒருவரின் உடலம் எஹெலியகொட – கரந்தன பகுதியின் வனப்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இயங்கும் சீனக் குழுக்களுக்கு இடையிலான மோதலே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
பொலிசாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, கடந்த புதன்கிழமை (22) இரவு 11:00 மணியளவில் மூன்று சீன நாட்டவர்கள் வாடகைக் கார் ஒன்றில் கொழும்பு போர்ட் சிட்டிக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்கள் அங்கிருந்த தொங்கு பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில், நேற்று வியாழக்கிழமை (23) அதிகாலை 2:00 மணி முதல் 3:00 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் கறுப்பு நிற வேனில் வந்த சுமார் 20 பேர் அடங்கிய சீனக் குழுவினர், குறித்த மூவரையும் துப்பாக்கிகளைக் காட்டி அச்சுறுத்தியுள்ளனர்.
அவர்களின் கை, கால்களைக் கட்டி, முகங்களை மூடி கொடூரமாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு, இருவரைப் பலவந்தமாகக் கறுப்பு நிற வேனிலும், ‘ஹாவோ சோங்’ என அடையாளம் காணப்பட்ட மூன்றாவது நபரை வேறொரு வாகனத்திலும் கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட இரண்டு சீன நாட்டவர்களும் போர்ட் சிட்டி வளாகத்திலுள்ள வாகனத் தரிப்பிடப் பகுதியில் வாகனத்துடனேயே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடத்தல்காரர்களால் கைவிட்டுச் செல்லப்பட்டனர். சென்றுள்ளனர்.
அவர்கள் தங்களைச் சுயமாக விடுவித்துக்கொண்டு, தங்களது நண்பர்கள் மூலம் கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் அதிகாலை 5:00 மணியளவில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதன் பின்னர், நேற்று பிற்பகல் எஹெலியகொட – கரந்தன வனப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்டு, கண்கள் மூடப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அத்துடன் இந்த சடலத்தை மறைப்பதற்காக அதன் மீது கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
தாக்குதலில் தப்பிய இரண்டு சீன நாட்டவர்களும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சடலத்தைப் பார்வையிட்டதில், அது கடத்தப்பட்ட ‘ஹாவோ சோங்’ என்பவரின் சடலம் என உறுதிப்படுத்தியுள்ளனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு அருகில், ஹாவோ சோங்கைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்றைக் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதற்கிடையில், இரண்டு சீன நாட்டவர்கள் கடத்திச் செல்லப்பட்டுக் கைவிடப்பட்ட கறுப்பு நிற காரை சோதனையிட்டதில், குண்டுகள் நிரப்பப்பட்ட Glock 44 ரக தானியங்கி துப்பாக்கி (Semi-automatic pistol) மற்றும் வோக்கி-டோக்கி (Walkie-talkie) சாதனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த வேன் ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த ஒருவரது பெயரிலும், பாதிக்கப்பட்டவர்கள் பயணித்த கார் கொழும்பு 05-இல் உள்ள நிறுவனமொன்றின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
காயமடைந்த இரு சீன நாட்டவர்களும் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறது. உண்மைகளை விரைவாகக் கண்டறிந்து, சீன நாட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை பொலிஸாரை கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், இலங்கையிலுள்ள சீன நாட்டவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
