ஆஸ்திரியாவின் பிரௌனாவ் ஆம் இன் (Braunau am Inn) நகரில் உள்ள அடால்ஃப் ஹிட்லர் பிறந்த வீடு, பல ஆண்டுகளாக நீடித்த விவாதங்களுக்குப் பின்னர் அதிகாரப்பூர்வமாக காவல் நிலையமாக மீளத் திறக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டிடம் வலதுசாரி தீவிரவாதிகளின் வழிபாட்டுத் தளமாக மாறுவதைத் தடுப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய வரலாற்றுச் சின்னத்தின் குறியீட்டுத் தன்மையை மாற்றுவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒஸ்திரிய அரசு தெரிவித்துள்ளது.
கட்டிடத்தின் வெளியே “Police” என்ற பெயர்ப்பலகை மட்டுமே காணப்படுவதுடன், அருகில் “மீண்டும் பாசிசம் வேண்டாம்” என்ற வாசகத்துடன் நினைவுக் சின்னமும் நிறுவப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1889ஆம் ஆண்டு பிறந்த ஹிட்லர், அந்த வீட்டில் சில வாரங்கள் மட்டுமே வசித்திருந்தாலும், பின்னர் அந்தக் கட்டிடம் நாசி ஆதரவாளர்களின் முக்கிய அடையாளமாக மாறியதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒஸ்திரியாவின் உள்துறை அமைச்சர் கெர்ஹார்ட் கார்னர், இந்தக் கட்டிடம் இனி ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பொதுமக்களுக்கான சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் இடமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
எனினும், வரலாற்றை மறைப்பதற்குப் பதிலாக அதை வெளிப்படையாக நினைவுகூர வேண்டும் என்று ஹோலோகாஸ்ட் நினைவு அமைப்புகள் உள்ளிட்ட சில தரப்பினர் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கட்டிடத்தின் பயன்பாடு மாற்றப்பட்டாலும், அதன் வரலாற்று முக்கியத்துவம் மாறாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
