இலங்கை மக்களுக்குப் புதியதொரு போக்குவரத்து அனுபவத்தை வழங்கி வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வரும் ‘மெட்ரோ பஸ்’ சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவி வருகின்றது.
இந்நிலையி்ல், ஜப்பான் அரசாங்கத்தின் முழுமையான நன்கொடையாக வழங்கப்பட்ட, தரைத்தளம் தாழ்ந்த (Low-floor) மேலும் 7 சிறப்பு பஸ்கள் வியாழக்கிழமை அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
‘Clean Sri Lanka’ அமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவை இணைந்து, நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் அனைவருக்குமான போக்குவரத்து உரிமையை உறுதி செய்யும் நோக்கிலேயே இச்சேவையை அறிமுகப்படுத்தின.
அனைவருக்கும் சமமான வாய்ப்புகளையும் மனித கண்ணியத்தையும் பாதுகாக்கும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில் இச்சேவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் எளிதாக ஏறி இறங்கக்கூடிய வகையிலான, நவீன குளிரூட்டப்பட்ட இந்தச் சிறப்பு பஸ்கள் கொழும்பு பிராந்தியத்தில் மெட்ரோ பஸ் சேவையில் இணைக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் முன்னோடித் திட்டம் தற்போது மாக்கும்புர பன்முகப் போக்குவரத்து மையத்தை மையமாகக் கொண்டு வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த பஸ்களை இயக்குவதற்காகப் போக்குவரத்து அமைச்சினால் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
