கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அக்கராயன் பாதுகாப்பு வனப்பகுதியை சட்டவிரோதமாக அழித்த சம்பவம் தொடர்பில் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முக்கம்பன் பகுதியில் உள்ள பாதுகாப்பு வனப்பகுதியில் நேற்று (24) பகல் JCB இயந்திரம் பயன்படுத்தி வனப்பகுதி அழிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வனஜீவராசிகள் அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, வனப்பகுதியை அழித்துக் கொண்டிருந்த சந்தேகநபர்களையும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட JCB இயந்திரத்தையும் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, சந்தேகநபர்கள் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்களைத் தாக்கி துப்பாக்கிகளைப் பறிக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அதிகாரிகள் சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
