நாட்டில் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துடனேயே இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்று (26) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அண்மையில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பிறகு எதிர்க்கட்சி குழப்பமான நிலையில் இருப்பது தெளிவாகியுள்ளதாக கூறினார்.
அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதற்குப் பதிலாக, வலுவான எதிர்க்கட்சியை உருவாக்குவதற்கான பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவர் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், எதிர்க்கட்சியில் பிணையில் உள்ளவர்களும் பல்வேறு ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்களும் இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், நாட்டின் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார்.
அதேவேளை, மலையகப் பகுதியில் கல்வி வளர்ச்சி தேசிய மட்டத்துடன் ஒப்பிடுகையில் பின்தங்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், ஆசிரியர் பற்றாக்குறை, பாடசாலைகளுக்கான காணி உரிமை, தோட்டப்பகுதி பாடசாலைகளுக்கான வீதி அபிவிருத்தி உள்ளிட்ட 22 முக்கிய கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்தார்.
