இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய குறித்து பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை இன்று (29) காலை 9.30 மணிக்கு கொழும்பில் கூடவுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் அண்மையில் விசேட பிரேரணை நிறைவேற்றியிருந்தது.
இதையடுத்து, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஏற்பட்டதாகக் கூறப்படும் அரசியல் உடன்பாட்டின் அடிப்படையிலேயே ரஜீவ் அமரசூரிய செயற்படுவதாகவும், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முற்றாக நிராகரித்து, அது அரசியல் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக் கண்டித்திருந்தது.
இந்த நிலையில், குறித்த கருத்துக்கு எதிராக சட்டரீதியான மற்றும் நிறுவன ரீதியான நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க பொதுச்சபை இன்று கூடவுள்ளது.
