நாட்டில் விற்பனை செய்யப்படும் நுகர்வோர் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு “வி-பிரமிதி” தேசிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
“சுத்தமான இலங்கை” (Clean Sri Lanka) வேலைத்திட்டம் மற்றும் தேசிய நேர்மை வாரத்துடன் இணைந்து, புறக்கோட்டை பொதுச் சந்தையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
முதற்கட்ட ஆய்வின் போது, வீதி உணவுகள், தேங்காய் எண்ணெய், விளையாட்டுப் பொருட்கள், கருப்பட்டி, பனைப் பாகு, அழகுசாதனப் பொருட்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் மின்சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் மாதிரிகள் சீரற்ற முறையில் சேகரிக்கப்பட்டு, அவற்றின் தரம், கலவை மற்றும் பாதுகாப்பை பரிசோதிக்க ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன.
உணவுப் பொருட்கள், பானங்கள் மற்றும் ஏனைய நுகர்வோர் பொருட்கள் நச்சுப் பொருட்கள் மற்றும் கன உலோகங்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் கூறுகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்தார்.
இலங்கை தரநிர்ணய நிறுவனம், தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இலங்கை அணுசக்தி சபையின் ஒத்துழைப்புடன், சுகாதார அமைச்சு, நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை மற்றும் இலங்கை பொலிஸாரின் பங்களிப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
