இந்திய வெளிவிவகார உயர்மட்டப் பிரதிநிதியொருவர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய ஆறு தமிழ்பேசும் அரசியல் கட்சிகள், தங்களது சுயாதீனத்துவம் மற்றும் கொள்கை நிலைப்பாடுகளைப் பேணிக்காத்தபடி, தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி இணைந்து செயற்பட ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த நிலையில், குறித்த ஆறு கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்திய உயர்மட்டப் பிரதிநிதியை கூட்டாகச் சந்தித்து முக்கிய அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
