பதுளை- வேவெஸ்ஸ தோட்டத்தின் மத்திய பிரிவில் உள்ள இறப்பர் தோட்டங்களில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதனால், இறப்பர் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும், அந்த பாதையை பயன்படுத்தும் பொதுமக்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
வேவெஸ்ஸ மத்திய பிரிவின் 14, 19ஆம் இலக்கங்களை கொண்ட இறப்பர் தோட்டங்களிலேயே காட்டெருமைகள் அதிகமாக நடமாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இறப்பர் பால் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் காட்டெருமைகளால் விரட்டப்பட்டதன் காரணமாக ஓடி விழுந்து காயமடைந்து, பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார்.
பகல் நேரங்களிலும் வினீத்தகம பிரதான பாதை மற்றும் குறித்த பிரிவின் பாதைகளிலும் எவ்வித அச்சமும் இன்றி கூட்டமாக காட்டெருமைகள் நடமாடுவதால் பொதுமக்களின் இயல்பான நடமாட்டத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலைமையை கருத்திற்கொண்டு வேவெஸ்ஸ தோட்ட நிர்வாகமும், பதுளை பிரதேச சபையும் காட்டெருமைகளை காடுகளுக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இறப்பர் தோட்டங்களை முறையாக பராமரிக்க அவற்றில் படர்ந்துள்ள பற்றைக் காடுகளை அழிக்க தோட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
