மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்களின் அணுகல் வசதிகள் தொடர்பான இறுதித் தணிக்கை அறிக்கை சமூக வலுவூட்டல் அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்ல, செத்சிறிபாய முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட வளாகங்களை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த தணிக்கை அறிக்கை, கடந்த 31ஆம் திகதி கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலவிடம் வழங்கப்பட்டது.
2026 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான பொது இடங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் அணுகல் வசதிகள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் திட்டமிடலின் கீழ் நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களின் அணுகல் வசதிகள் தொடர்பான தணிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையில் செத்சிறிபாய வளாகத்தில் அமைந்துள்ள 8 அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் 17 நிர்வாக மாவட்டங்களிலும் இந்த அணுகல் வசதி தணிக்கை நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
