உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கும் வகையில் இலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் குறித்து, உலகின் மிகப்பெரிய தேசிய நீதிபதிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சர்வதேச நீதிபதிகள் சங்கம் (IAJ) கடும் கவலை வெளியிட்டுள்ளது.
வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓய்வுபெறும் வயதை மாற்றுவதற்கு எதிர்ப்பு இல்லை என்றாலும், அது முன்வைக்கப்பட்டுள்ள காலம், நடைமுறை மற்றும் அதன் நோக்கம் குறித்த பரவலான சந்தேகங்களே கவலையை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
நீதித்துறையைப் பாதிக்கும் அரசியலமைப்பு மாற்றங்கள் நியாயமான, கொள்கை அடிப்படையிலான, பரந்த ஆலோசனையுடனான நடைமுறையின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், திடீர் மற்றும் முறையற்ற அணுகுமுறை நீதித்துறையின் சுயாதீனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் IAJ எச்சரித்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்கு நன்மை அளிக்கும் நோக்கத்திலேயே இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுவதாக நிலவும் கருத்து, அரசின் உண்மையான நோக்கம் எதுவாக இருந்தாலும் நீதித்துறையின் சுயாதீனம் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே விவகாரத்தில் இலங்கை நீதித்துறை சேவைச் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டிருந்த கவலைகளையும் தாம் பகிர்ந்து கொள்வதாக IAJ தெரிவித்துள்ளது.
தற்போதைய வடிவிலுள்ள இந்தச் சட்டமூலத்தை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசைக் கேட்டுக்கொண்டுள்ள சர்வதேச நீதிபதிகள் சங்கம், நாட்டில் நடைபெறும் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
